அயோத்தி இந்தியாவின் இதயப்பகுதியில் இருப்பதாலோ என்னவோ, அங்கு விழுந்த அடி காலத்திற்கும் இந்தியாவின் தேகமெங்கும் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வேண்டுமானால் 1992 நிகழ்வு, பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கலாம். ஆனால், அடிப்படை பிரச்சினை 1885 யிலேயே வேர் விட தொடங்கிவிட்டது.

இந்து மத நம்பிக்கைபடி அயோத்தி, தசரதன் ஆண்ட நகரம். ராமர் பிறந்த மண். தற்போது இங்கு இருக்கும் பாபர் மசூதி, முகாலய அரசர் பாபரின் தளபதி மிர் பஹியால் கட்டப்பட்டது. அவரை இங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதியை கட்டினாரா என்பது இந்தியாவிற்கு தலைவலியை கொடுக்கும் சர்ச்சைக்குரிய கேள்வி. பதிலுக்கு மொத்த நாடும் காத்திருக்கிறது.
1885 இல் ரகுபர் தாஸ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அயோத்தியில் பாபர் மசூதிக்கு பக்கமிருக்கும் அவருடைய நிலத்தில் ஒரு திண்டு (திண்ணை போன்ற மேடை) இருந்தது. அது தான் ராமர் பிறந்ததாக நம்பப்பட்டு வந்த இடம். அதில் கோவில் கட்ட அனுமதியளிக்கும் படி ஒரு வழக்கு தொடர்ந்தார். இடம் அவருடையதாக இருந்தாலும், பக்கத்திலேயே மசூதி இருப்பதால் கோவில் கட்ட அனுமதிக்க முடியாது என்று ஃபைசாபாத் துணை நீதிபதி தீர்ப்பளித்தார். இதே வழக்கு ஃபைசாபாத் மாவட்ட நீதிபதியிடம் செல்ல, அவரும் அனுமதி மறுத்தார். “என்னத்தான் இந்துக்களின் புனிதத்தலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டு இருந்தாலும், இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கட்டும்” என்றார் அந்த ஆங்கிலேயே நீதிபதி சம்பியர்.
பிறகு இரு மதத்தினரும் இந்த இடத்தில் வழிபாடு நடத்தி வந்தனர்.
1934இல் ஒரு பசு கொல்லப்பட்டதால் உருவான கலவரத்தில் மசூதி தாக்கப்பட்டது. அரசே அதை சரி செய்தும் கொடுத்தது.
எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது. 1949 இல் மசூதிக்குள் ஒரு ராமர் சிலை வைக்கப்பட்டது. யார் வைத்தது? எப்படி வைக்கப்பட்டது? தெரியாது. ஆனால், அதற்கு இந்துக்கள் கூட்டம் கூடியது. பூஜைகளும் நடத்தப்பட்டது. பிறகு கூட்டம் தடுக்கப்பட்டு, மசூதி பூட்டப்பட்டாலும், அந்த சிலை வெளியே எடுக்கப்படவில்லை. அந்த சிலையை வெளியே எடுக்க, யாருக்கும் தைரியம் வரவில்லை. அப்போதைய பிரதமர் நேரு ஆணையிட்டும், யாரும் எடுக்க தயாராக இல்லை. அந்த ஊர் மாஜிஸ்ட்ரேட், “என்னை வேலைவிட்டு போக சொன்னாலும் சொல்லுங்க, அந்த சிலை எடுக்க சொல்லாதீங்க” என்றார்.
ஃபைசாபாத் கமிஷனர் அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த சிலையை தற்சமயம் எடுப்பது சரிப்பட்டு வராது. கொஞ்ச நாள் பொறுப்போம். எல்லாம் அடங்கிய பிறகு முடிவெடுப்போம்.
அவர் சொன்னது போலவே சில காலம் ஏதும் பிரச்சினை இல்லாமல் சென்றது. 1949 இல் நகர மாஜிஸ்ட்ரேட் ஆணையின்படி, அந்த இடம் நகராட்சி சேர்மனால் கையகப்படுத்தப்பட்டது.
திரும்ப 1950 இல் கோபால் சிங் என்பவர் மசூதிக்குள் ராமர் சிலைக்கு பூஜை செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும், உள்ளூர் பூசாரி ஒருவர் மட்டும் உள்ளே தினமும் சென்று வர அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டில் வழங்கப்பட்ட இன்னொரு வழக்கின் தீர்ப்பில், “இந்த மசூதி முஸ்லீம்களால் பல ஆண்டு காலம், வழிப்பாட்டுக்காக பயன்பட்டு வந்ததாகவும், அது ராமரின் வழிப்பாட்டு தலமாக இருந்ததில்லை எனவும்” கூறப்பட்டது. ராமர் சிலை ரகசியமாக, தவறாக உள்ளே வைக்கப்பட்டதாக அந்த தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டது.
1955 இல் அந்த இடத்திற்கு உரிமை கோரி நின்மோஹி அஹாரா என்பவரும், மொகமது ஹசிம் என்பவர் தலைமையில் ஐந்து முஸ்லிம்கள் அதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு தீர்ப்பளித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், தற்போது நிலவும் நிலையிலேயே நீடிக்குமாறு தீர்ப்பளித்தனர். பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்தில் ஒரு முடிவு கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறினாலும், ஒன்றும் நடக்கவில்லை.
1961 இல் ஹசிம் இடத்தை முஸ்லீம்களிடம் திரும்ப வழங்க கோரி இன்னொரு வழக்கு தொடர்ந்தார். 1964 இல் இதை பற்றிய அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கிற்கு தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டது. 1968 இல் அந்த இடத்திற்கு ஒரு பொறுப்பாளரை நீதிமன்றம் நியமித்தது. ஆனால், 1971 இல் இன்னொரு வழக்கு தொடரப்பட்டதால் அவருக்கு வேலை இல்லாமல் போனது.
1983 இல் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த பிரச்சினையை பெரியளவில் எடுத்த செல்லும் வரை, அந்த வழக்கு கண்டுக்கொள்ளப்படவில்லை. பிரச்சினையின் தீவிரம் கூட கூட, ஃபைசாபாத் நீதிமன்றம் 1886இல் அந்த இடத்தை இழுத்து மூடியது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டை சந்தித்து ராம தரிசனத்திற்கு அனுமதி கோர, அதற்கு அவர் வழங்கிய ஆணை, கடும் சூட்டை கிளப்பியது. கலவரம் ஆரம்பித்தது.
நீதிபதி பாண்டே கூறியது என்னவென்றால், “இருதரப்பையும் விசாரித்ததில், அந்த இடத்தை திறந்து விடுவதாலும், சிலைகளுக்கு பூஜை செய்வதாலும் முஸ்லீம் மக்களுக்கு எந்த பிரச்சினை இல்லையென்று தெரிகிறது. திறந்துவிடுவதால் ஒன்றும் வானம் இடிந்து விழ போவதில்லை”.
இதை தொடர்ந்து வக்பூ வாரியமும், பாப்ரி மஸ்ஜித் செயல் குழுவும் அலாகாபாத் நீதிமன்றத்திற்கு சென்றனர். வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மதவாதிகளுக்கு இது முழு நேர தொழிலானது. கரசேவகர்கள் பிஸியானார்கள். 1990 இல் முலாயம் சிங் ஆட்சியில், கரசேவகர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தப்பட, இதை பிரச்சினையாக்கி பாரதீய ஜனதா உத்திரப்பிரதேசத்தில் 1991 ஆட்சியை பிடித்தது. பாஜக முதல்வர், மசூதியை சுற்றி அமைந்துள்ள இரண்டே முக்கால் ஏக்கரை, கோவில் கட்டுவதற்காக கையகப்படுத்தினார். பாப்ரி மஸ்ஜித் செயல் குழு அப்படியேதும் கட்டப்படாமல் இருக்க தடைக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.
1992இல் பாஜக தலைமையின் முன்னிலையில் மசூதி தகர்க்கப்பட்டது. இந்தியாவே ஆட்டம் கண்டது. கல்யாண் சிங் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தை சுற்றி 67 ஏக்கர், மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு, இந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு முன்பு, ராமர் கோவில் இருந்ததா? என்று கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. தற்போது தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு, அதன் மேல் முடிவெடுக்க இம்மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் கூடுகிறது.
---
வழக்கின் தீர்ப்பு, அங்கு ராமர் கோவில் இருந்ததா இல்லையா என்பதை குறித்தே அமையும். தீர்ப்பையொட்டி கலவரம் ஏற்படலாம் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், வழக்கின் முடிவு எப்படி இருந்தாலும், பாதிக்கப்பட்ட அணி மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் செல்லும். முடிவில், அதுவும் இழுக்கப்பட்டு இழுக்கப்பட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை அறிய, நாமெல்லாம் இருப்போமா என்பதே சந்தேகம் தான்.
ஒரு சாதாரண இடப்பிரச்சினையாக இதை எடுத்துக்கொண்டால், என்னத்தான் முன்பு ராமர் கோவில் இருந்தாலும், 400 ஆண்டுகளுக்கு மேலாக மசூதி இருப்பதால், அதில் கோவில் கட்ட சட்டரீதியாக இடமில்லை. இல்லாவிட்டால், இப்போது நாம் இருக்கும் இடமெல்லாம் நமக்கில்லாமல் போகலாம். இது என் மூதாதையர் இடம், அது என் மூதாதையர் இடம் என ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள்.
இப்பிரச்சினை பெரிதாக காரணம், அரசியல்வாதிகளே. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, இது ஒரு முக்கிய காரணம். ஆனால், முன்பு இருந்தது போல தற்போது மக்களிடம் இதற்கு ஈடுபாடு அதிகமில்லை. அதே சமயம், பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, அப்போதைய தொழிலதிபர்களும் காரணமாக இருந்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், தொழில் சூழல் நன்றாக அமையும் என்று ஒரு நம்பிக்கையிருந்ததால், அவர்களது ஆதரவு இருந்தது. ஆனால், தற்போது தொழிலதிபர்களின் பிரதிநிதியாக பிரதமராக செயல்படுவதால், காங்கிரஸிற்கு அவர்களது முழு ஆதரவும் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மதரீதியாக பிரச்சினை ஏற்பட்டு, சுமூகமான தொழிற்சூழல் கெட தொழிற்துறை விரும்பாததால், அவர்களை காப்பதற்காக, காங்கிரஸ் இப்பிரச்சினையை தள்ளிப்போடவும், முக்கியத்துவம் கொடுக்காமல் கண்டுக்கொள்ளாமலும் இருக்கவே முயலும். ஏன், பாஜகவும் இதை பெரிதாக பிரச்சினையாக்காது என்றே கருதப்படுகிறது.
எப்படியோ, இவ்வழக்கின் தீர்ப்பில் நடுநிலைமை சாத்தியம் இல்லை. தலைவலியாகத்தான் இருக்கப்போகிறது. இந்திய நீதித்துறையின் பெரும் பிரச்சினையான கால விரயமே, இப்பிரச்சினையை காக்கக்கூடும். தீர்ப்பு வழங்கப்போகும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெறுவதால், அதன் பிறகு உடனே தீர்ப்பு வழங்க முடியாது. அச்சமயம் விசாரணை திரும்ப முதலில் இருந்து நடைப்பெறும்.
நாமும் இன்னும் சில பல ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.
பின்குறிப்பு - இணையத்தில் பல்வேறு தளங்களில் வாசித்ததை பதிந்திருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால் குறிப்பிடவும்.
.